Archives: ஜூலை 2019

பணிசெய்யும் போதே பயிற்சி

பிரேசிலைச் சேர்ந்த மேலாளர் ஒருவர், தனக்குக் கீழ் வேலைசெய்த கண்காணிப்பாளர்களிடம், அறிக்கை ஒன்றை தன்னிடம் சமர்ப்பிக்கும்படிச் சொன்னார். ஒவ்வொரு அறையையும் சுத்தம் செய்வது யார், எந்தெந்த அறைகளெல்லாம் சுத்தம்செய்யாமல் இருக்கின்றன, ஒவ்வொரு அறையையும் சுத்தம்செய்ய பணியாட்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் போன்ற விபரங்களை தினமும் பதிவுசெய்து, மேலாளருக்கு அவர்கள் அனுப்பவேண்டும். முதல் “தின” அறிக்கையானது ஒரு வாரம் கழித்து மேலாளரின் கைக்கு வந்தது; ஆனால் அரைகுறை விபரங்களோடு அறிக்கை இருந்தது.

காரணம் என்னவென்று விசாரித்தபோது, சுத்தம்செய்கிற பணியாட்கள் பலருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்கிற உண்மை மேலாளருக்குத் தெரியவந்தது. அந்தப் பணியாட்களை அவர் பணிநீக்கம் செய்திருக்கலாம்; அதற்கு பதிலாக, அவர்கள் எழுதப்படிக்க கற்றுக்கொள்வதற்கான வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தார். ஐந்தே மாதங்களுக்குள் அந்தப் பணியாட்கள் அனைவருமே அடிப்படை அளவில் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் அவர்கள் வேலைசெய்ய முடிந்தது.

தேவனும்கூட நாம் அவர் பணியை தொடர்ந்து செய்ய நம்மைப் பயிற்றுவிக்கும்படி நம்முடைய போராட்டங்களை வாய்ப்புகளாக மாற்றுகிறார். அனுபவமற்ற பேதுருவின் வாழ்க்கையிலும்தான் எத்தனை தவறுகள்! தண்ணீரின்மேல் நடந்தபோது விசுவாசத்தில் தடுமாறினார். தேவாலய வரிப்பணத்தை இயேசு செலுத்தவேண்டுமா, வேண்டாமா என்று தெரியாமல் குழம்பினார் (மத். 17:24-27). தம்முடைய சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து இயேசு தீர்க்கதரிசனமாகச் சொன்னபோது, பேதுரு அதற்கு குறுக்கே நின்றார் (மத். 16:21-23). அந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும், தாம் வேறு யாருமல்ல, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்பதை பேதுருவுக்குக் கற்றுக்கொடுத்தார் (வச. 16). பேதுருவும் தான் கற்கவேண்டிய விஷயங்களுக்குச் செவிகொடுத்து, அவற்றை அறிந்துகொண்டார். அதனால்தான் ஆதிகால சபையை அவர் நிறுவமுடிந்தது (வச. 18).

ஏதாவது தோல்வியால் இன்று நீங்கள் துவண்டுபோயிருந்தால், தேவ பணியை நீங்கள் தொடர்ந்துசெய்யும்படி அந்த அனுபவத்தின்மூலம் இயேசு உங்களுக்குப் போதித்து, வழிநடத்தமுடியும். பேதுருவிடம் குற்றங்குறைகள் இருந்தபோதிலும், அவரோடு தேவன் தொடர்ந்து செயல்பட்டார். தேவனுடைய ராஜ்யம் கட்டுப்படும்படி அவருடைய வருகைமட்டும் நம்மூலமாகவும் அவர் செயல்படமுடியும்.

சமாதானம் பண்ணுதல்

இன்று நம் உலகம் இருக்கிற நிலையை விவாகரத்து மிகச்சரியாக எடுத்துக்காட்டுவதாக லுக் அன்ட் ஸீ: எ போர்ட்ரைட் ஆஃப் வென்டல் பெரி என்கிற ஆவணப்படத்தில், அதன் ஆசிரியரான பெரி வலியுறுத்துகிறார். நாம் மற்றவர்களிடமிருந்தும், நம் வரலாற்றிடமிருந்தும், நம் தேசத்திடமிருந்தும் விவாகரத்தான நிலையில்தான் இருக்கிறோம். ஒன்று சேர்ந்து இருக்கவேண்டியவை பிரிந்து நிற்கின்றன. இந்த மோசமான உண்மையைச் சரிசெய்வதற்கு என்ன செய்யலாம் என்று பெரியிடம் கேட்டபோது, “எல்லாவற்றையும் மீண்டும் ஒன்றுசேர்த்துவிட முடியாது. இரண்டு விஷயங்களை எடுத்து, அவற்றைச் சேர்க்கலாம்” என்று சொன்னார். பிரிந்துகிடக்கிற இரண்டு விஷயங்களை எடுத்து, அவற்றை மீண்டும் ஒன்றாகச் சேர்க்கலாம்.

“சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று இயேசு சொல்கிறார் (மத். 5:9). சமாதானத்தைக் கொண்டுவருவதுதான் ஷலோம். உலகத்தை மீண்டும் சரிசெய்கிற ஒரு நிலையை ஷலோம் சுட்டிக்காட்டுகிறது. ஷலோம் என்றால், “இப்பிரபஞ்சம் செழித்து, ஒன்றுபட்டு, மகிழ்ச்சி
நிறைந்திருப்பதாகும்... அப்படித்தான் எல்லாமே இருக்கவேண்டும்” என்று இறையியல் வல்லுனர் ஒருவர் கூறுகிறார். உடைந்துபோன ஒன்றை எடுத்து, மீண்டும் சரிபடுத்துவதுதான் ஷலோம். இயேசு வழிகாட்டுவதுபோல, காரியங்களைச் சரிசெய்வதற்கு நாம் பிரயாசப்படுவோம். நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கவும், “பூமிக்கு உப்பாக” இருக்கவும், “உலகத்திற்கு வெளிச்சமாக” இருக்கவும் அவர் நம்மை அழைக்கிறார் (வச. 13-14).

உலகத்தில் சமாதானம் பண்ணுகிறவர்களாக விளங்குவதற்கு அநேக வழிகள் உள்ளன. எந்த வழியாக இருந்தாலும் பிரிவை வெல்லுபவர்களாக இருக்கவேண்டுமே தவிர, பிரிவை உண்டாக்குபவர்களாக இருந்துவிடக்கூடாது. நட்பு முறிந்துபோகவோ, வாழ்வதற்கே திண்டாடிவரும் அக்கம்பக்கத்தார் ஒருவர் முடங்கிப்போவதற்கோ, தைரியமிழப்பதற்கோ தனிமைப்படுவதற்கோ விடமாட்டேன் என்று தேவனுடைய வல்லமையால் நாம் தீர்மானம் எடுக்கவேண்டும். எங்கெல்லாம் பிரிவு நுழைந்திருக்கிறதெனப் பார்ப்போம், பிரிவை அகற்றி மீண்டும் சரிசெய்வதற்கு தேவன் ஞானத்தைத் தருவாரென்கிற நம்பிக்கையோடு அதைச் சரிசெய்ய முயல்வோம்.

வாழ்க்கை மிகவும் குறுகியதே

மரணம் மோசமான ஒரு நிஜம். நம் வாழ்நாளோ மிகவும் குறுகியது. பாபி மரித்தபோதுதான் இந்த உண்மை எனக்கு பளிச்செனத் தெரிந்தது. அவள் என்னுடைய சிறுபிராயத் தோழி, இருபத்து நான்கு வயதுதான், பனிமூடிய சாலையில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் அவள் பலியானாள். பிரச்சனைமிக்க ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான் அவளுடைய வாழ்க்கை சற்றே பசுமையாகி வந்தது. இயேசுவையும் அவள் ஏற்றுக்கொண்டு சிலகாலம்தான் ஆகிறது. இவ்வளவு சீக்கிரத்தில் அவள் ஏன் மரிக்கவேண்டும்?

வாழ்க்கை மிகவும் குறுகியதாகவும், முற்றிலும் வருத்தம் நிறைந்ததாகவும் சிலசமயங்களில் மாறிவிடுகிறது. சங்கீதம் 39 இல் தன்னுடைய பாடுகளை நினைத்து புலம்புகிறார் தாவீது; “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்” என்று சொல்கிறார். (வச. 4-5). வாழ்க்கை குறுகியது. நாம் நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் என்ன, ஒட்டுமொத்த காலங்களோடும் ஒப்பிடும்போது பூமியில் நம் வாழ்க்கை ஒரு துளியளவுகூட வராதே!

தாவீதோடு சேர்ந்து நாமும் “நீரே (கர்த்தரே) என் நம்பிக்கை” என்று சொல்லலாம். வசனம் 7. நாம் வாழ்வதில் அர்த்தமிருக்கிறது என்று நம்பலாம். நம்முடைய மாமிசம் அழுகி, ஒன்றுமில்லாமல் போனாலும், “உள்ளான மனுஷன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்” என்றும், ஒருநாளில் அவரோடு நாம் நித்தியமாக வாழப்போகிறோம் என்றும் உறுதியாக விசுவாசிக்கலாம். 2கொரிந்தியர் 4:16-5:1.  இவ்வாறு நிச்சயம் நடக்குமென்று “ஆவியென்னும் அச்சாரத்தை” தேவன் நமக்குத் தந்திருக்கிறார். 2கொரிந்தியர் 5:5.

எதைக் குறித்துப் பெருமைபாராட்டலாம்?

உண்மையாக இருப்பது என்றால் என்ன அர்த்தம்? முக்கியமான இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயல்கிறது, த வெல்வடீன் ரேபிட் என்கிற ஒரு சிறுவர் கதை. ஒரு சிறுவனுக்கு பல பொம்மைகள் இருக்கின்றன, அவற்றில் வெல்வெட் துணியால் செய்யப்பட்ட ஒரு முயல் பொம்மையும் உண்டு; அது அந்தச் சிறுவன் தன்னை நேசித்து, அதன் மூலம் தான் உண்மையான முயலாக மாறுவதற்கு முயற்சியெடுக்கிற பயணம்தான் அந்தக் கதை. அந்தப் பொம்மைகளில் துணியாலான ஒரு குதிரைபொம்மையும் இருக்கிறது. அதுதான் எல்லாவற்றிலும் பழையது, அறிவானது. அது “புதுப்புது எந்திரப் பொம்மைகள் வருவதையும், அவை பெருமையாகத் தம்பட்டம் அடித்து, பிறகு உடைந்து, தூரே எறியப்படுவதையும் பார்த்திருக்கிறது.”  அந்தப் பொம்மைகள் எல்லாம் பார்ப்பதற்கு அட்டகாசமாகத் தான் இருந்தன; ஆனால், அன்புக்கு எதிரே அவற்றின் பெருமையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

வீறாப்புடன் துவங்குகிற பெருமை போகப்போக ஆட்டம் கண்டுவிடும். மூன்று விஷயங்களில் இந்த உண்மையைக் காணமுடியுமென எரேமியா பட்டியலிடுகிறார். “ஞானம்... பராக்கிரமம்... ஐசுவரியம்.”
(எரே. 9:23). ஞானமுள்ள அந்த முதிய தீர்க்கதரிசி, தன்னுடைய காலத்திலேயே இவற்றில் ஒன்று இரண்டு உண்மைகளை தன் கண்ணாலேயே கண்டிருக்கலாம். அதனால்தான் அவ்வாறு பெருமைபாராட்டுவதற்கு பதிலாக ஆண்டவருடைய சத்தியத்தை அறிந்துகொள்ளும்படி கூறுகிறார்: “மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.” (வச. 24).

தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், நம்முடைய நல்ல பிதாவாகிய தேவனைப் பற்றியே பெருமைபாராட்டக்கடவோம். அவருடைய மாபெரும் அன்பு எவ்வளவுக்கு நம் அறிவுக்குப் புலப்படுகிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக உண்மையானவர்களாக நாம் வளரமுடியும்.

தலைக்கு பின்புறமும் கண்கள் உண்டு

என் சிறுபிராயத்தில், மற்ற சிறுவர்கள் போலவே நானும் ஒரு குறும்புக்கார சிறுமிதான். யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் திருட்டுத்தனமாக சேட்டைசெய்வேன். ஆனாலும் அம்மாவிடம் மாட்டிக்கொள்வது வழக்கமான ஒன்று. என் குறும்புத்தனங்களை சரியாகவும், உடனடியாகவும் அம்மா கண்டுபிடிப்பார், எனக்கு ஆச்சரியமாக இருக்கும். உண்மை எப்படி அம்மாவுக்குத் தெரிகிறது என்கிற பிரமிப்போடு அவரிடம் அதுபற்றிக் கேட்பேன்; உடனே அவர் “தலைக்கு பின்புறமும் எனக்கு கண்கள் உண்டு” என்று சொல்வார். அதனால் அம்மா திரும்பி நிற்கிற சமயங்களில் எல்லாம் கண்களைத் தேடிப்பார்த்திருக்கிறேன். ‘என்னுடைய பார்வைக்கு அந்தக் கண்கள் தெரியாதோ, அம்மாவின் சிவப்புநிற முடிகளுக்குள் கீழ் மறைந்திருக்குமோ?’ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். நான் வளர்ந்தபிறகு, கண்களைத் தேடுவதை நிறுத்தினேன். அம்மாவுக்குத் தெரியாமல் எதுவும் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது. அதாவது அவ்வளவுக்கு அவர் தன் பிள்ளைகளைக் கவனித்திருக்கிறார். அன்போடு தன் பிள்ளைகள்மேல் அவர் காட்டிய அக்கறைதான் அதற்கு காரணம்.

அம்மாவின் அன்பான கவனிப்புக்கு நான் நன்றிசொல்ல வேண்டும் (அம்மாவிடம் மாட்டிக்கொள்ளாமல் ஒரு குறும்புத்தனம்கூட செய்யமுடியவில்லையே என்று அவ்வப்போது நான் நினைப்பதும் உண்டு.) ஆனால், பரேலாகத்திலிருந்து தேவன் நம்மைப் பார்க்கிறார் , “எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்” என்பது அவர்மேல் மிகுந்த நன்றியுணர்வை உண்டாக்குகிறது (சங். 33:13). நாம் செய்கிறவற்றை மட்டுமல்ல, அதற்கும் அதிகமாக அவருக்குத் தெரியும். நம்முடைய வருத்தங்கள், சந்தோஷங்கள், ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு என அனைத்தையும் அவர் அறிவார்.

தேவன் நம்முடைய மெய்யான குணத்தைப் பார்த்து, நமக்கு இன்னும் என்ன தேவைப்படுகிறது என்பதை மிகசரியாக அறிகிறார். நம்முடைய இருதயங்களின் உள்ளிந்திரியங்களையும் காண்கிற அளவுக்கு ஊடுருவி பார்க்க வல்லவர், தம்மேல் அன்புகூர்ந்து, தம்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள்மேல் கண்ணோக்கமா யிருக்கிறார் (வச. 19). நம்மேல் அன்பும் அக்கறையும் வைத்திருக்கும் பிதா அவர்.